பந்தலூர்,ஆக.26 : பந்தலூர் அருகே ஏலமன்னாவில் காட்டு யாைன ஒன்று ரேஷன் கடை ஷட்டரை உதைத்து உடைக்க முயன்றது. குடியிருப்புவாசிகள் சத்தமிட்டதால் யானை வனப்பகுதி நோக்கி நகர்ந்து சென்றது. பந்தலூர் சுற்று வட்டாரம் பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதம் செய்வது விவசாய பயிர்களை சேதம் செய்வது கடைகளை உடைத்து அரிசி, பருப்பு போன்ற உணவு பண்டங்களை ருசிப்பது என தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஷட்டரை யானை உடைத்துள்ளது.குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் யானை நடமாட்டம் குறித்து தெரிந்து கொண்ட குடியிருப்புவாசிகள் யானையை சத்தமிட்டு துரத்தியுள்ளனர். யானை அங்கிருந்து நகர்ந்து சென்றதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.இந்நிலையில் பந்தலூர் இரும்பு பாலம் மற்றும் சோலைமலை தனியார் தோட்டம் பகுதியில் நேற்று ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையில் கம்பீரமாக உலாவியதால் அப்பகுதி தோட்டங்களில் பணி செய்த தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் யானையைப் பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.